30
அஜ்னபி கவிதைகள்
பேராண்மை
தூரதேசத் தோழமையின்
நேர வலயம் அனுசரித்து
பகலிரவு அனுமானத்தில்
வாழ்த்துகள் தொடுத்தும்
துயிற்பொழுதின் மணித்துளிகள்
கரைந்தொழுகும் ஏகாந்த நிசியில்
திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்
முறுவற்குறி இழைத்தும்
மெய்ந்நிகர்வெளி வழி நெய்கிற
வசீகரக் கனாக்களின் உட்சரடு
பெருந்திணையென்றுணர்தலே
பேராண்மை என்பது
அவதார் மாற்றிய
அறிவோர் துணிபு.
*
பசி
ஆறேழு நிறுத்தங்களாய்
முனைப்புடன் சப்பிக் கொண்டிருந்த
அழுக்குச்சீலை சுவை தீர்ந்து
பசித்தழும் குழந்தை கையில்
திணிக்கப்பட்ட தின்பண்டத்துடன்
கரைந்தொழுகிப் பிசிறடிக்கிறது
தொடருந்துப் பாடகியின்
தேசாபிமானப் பாடல்.
***