23
திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, நாராயணன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ஊரில் இருந்த தம்பிக்கு போன் செய்து, “விபரத்தைச் சொல்லி டேய், கோவில்ல இருந்து ஒரு சிவப்பு வேட்டி எடுத்துட்டு வாடா, எவன் கேட்டாலும் நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். ஹாஸ்டலை நெருங்க நெருங்க ஏராளமான கூட்டம் இருந்தது.
அலங்காரத் தேர், தாரை தப்பட்டை என பலமான ஏற்பாடுகள். படுக்க வைக்கப்பட்டிருந்த நாராயணன் மீது சிவப்பு வேட்டியை போர்த்திவிட்டு, அப்போதைய காண்ட்ராக்டரை அணுகினேன்.
எனக்கு ஆறு மாசமாத்தாங்க பழக்கம். இவர் இறந்த உடனே பசங்க வாட்ஸப்பில் மெசேஜ் போட்டு விட்டிருக்காங்க. 20 வருசமா இந்த ஹாஸ்டல்ல இருந்த பையங்கள்ளாம் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டாங்க. வெளிநாட்டு பசங்கள்ளாம் அவங்க சொந்தம், பிரண்ட்ஸ் மூலமா வேட்டி, மாலை, காசுன்னு கொடுத்து விட்டிருக்காங்க. சர்வரா இருந்த பழைய ஆளுங்க, ஸ்வீப்பர்ஸ்னு எல்லாம் கேள்விப்பட்டு வந்துட்டாங்க. பழைய லெக்சரர்கள் கூட நிறைய வந்துட்டாங்கப்பா. காலையில காலேஜ் சேர்மன் மகன் வந்து மரியாதை செஞ்சுட்டு நல்லபடியா எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டாருங்க. யார் மனசும் கோணாம நல்லது செஞ்சிருக்கார்ப்பா, தங்கமான மனுஷன் என்றார். அடக்கம் முடிந்து ஹாஸ்டல் திரும்பினோம்.
ஏராளமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட்டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது.
***